சிபிஐ விசாரணைக்கு மாற்றியது நிரந்தர உத்தரவு அல்ல: ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும் - வழக்கறிஞர் வில்சன் உறுதி!
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இது இடைக்கால உத்தரவுதான்:
வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:
- கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது இடைக்கால உத்தரவுதான். இது நிரந்தர உத்தரவு அல்ல.
- கரூர் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும்.
- சிறப்புப் புலனாய்வுக் குழு இதுவரை என்ன விசாரித்தார்களோ அதனைப் பரிமாற்றம் (Transfer) செய்யச் சொல்லிதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்காது. கூட்ட நெரிசல் வழக்கில் இறுதி உத்தரவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
நீதிமன்ற அவமதிப்பு:
கரூர் துயரம் தொடர்பாகச் சில நபர்கள், தங்கள் அனுமதி இல்லாமல் போலியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் போலியானதாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், தற்போதைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும் என்றும், சிபிஐ கிரிமினல் வழக்காகப் பதிவு செய்து விசாரிக்கும் என்றும் வில்சன் தெரிவித்தார்.
மேலும், "கரூர் நெரிசல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திற்குத் தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவைப் பெற்றது" என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பு என்றும், நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்குவது இடைக்கால நடவடிக்கை மட்டுமே என்றும், இறுதித் தீர்ப்பை எதிர்காலத்தில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments